தமிழனுடைய உரிமை-எதிர்காலத்தை பற்றி அரசுக்கு கவலையில்லை: கனிமொழி குற்றச்சாட்டு

தமிழனுடைய உரிமை மற்றும் எதிர்காலத்தை பற்றி தமிழக அரசுக்கு கவலையில்லை என்று சேலத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
மணமக்களை கனிமொழி எம்.பி., வாழ்த்திய காட்சி.
மணமக்களை கனிமொழி எம்.பி., வாழ்த்திய காட்சி.
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று காலை விமானம் மூலம் சேலத்திற்கு வந்தார்.

இன்று சேலம் கிச்சிப்பாளையத்தில் நடைபெற்ற தமிழ்த்தொண்டன் என்ற லயன் ஆர்.ரகு- ஸ்ரீதேவி திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

சமூகத்தில் தற்போது காதல் திருமணம் என்றால் அது ஏதோ வேப்பங்காயாக மாறக்கூடிய ஒரு சூழல் உருவாகி கொண்டிருக்கிறது என்று நாம் பார்க்கிறோம். எத்தனை ஆணவ கொலைகள் இந்த சமூகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இங்கே பேசும் போது குறிப்பிட்டார்கள் சுய மரியாதை திருமணங்கள் இன்று எல்லா இடங்களிலும் நடைபெறுகிறது என்று. ஆனால், சில நேரங்களிலேயே நம்ம கட்சியிலேயே சுய மரியாதை திருமணங்கள் நடைபெறுவதில்லை. அதுவும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று.

மத்தியில் இருக்க கூடிய அரசாங்கம் தமிழ் மக்களை, தமிழ்நாட்டை எந்த வழியில் எல்லாம் நசுக்க முடியுமோ?, நம் உரிமைகளை எப்படி எல்லாம் பறிக்க முடியுமோ? அதற்கான அத்தனை வழிகளையும் அவர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கே இருக்கக் கூடிய அரசாங்கம் தமிழனுடைய உரிமை, தமிழனுடைய வாழ்க்கை, தமிழனுடைய எதிர்காலம் என எதை பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே நாம் அத்தனை பேரும் தமிழர்களாக, தமிழ் பேசக் கூடியவர்களாக, சுயமரியாதை உடையவர்களாக, திராவிடர்களாக ஒன்றாக நின்று நம் உரிமைகளுக்காக போராட வேண்டிய ஒரு காலக்கட்டத்திலேயே நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

இங்கு இருக்க கூடிய ஒவ்வொரு வரும் நம் நாட்டை, நம் இனத்தை, நம் மொழியை காப்பாற்ற வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம். இதை உணர்ந்து கொண்டு, நாம் அத்தனை பேரும் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com