ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு
Published on

சென்னை:

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அவர் மரணம் குறித்த சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். ஆனால், விசாரணை அதிகாரி நியமிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்கான விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, நாங்கள் யாரும் அவரை பார்க்கவில்லை. அவர் இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம்’ என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

முறைப்படி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு விரைவில் விசாரணை தொடங்கும் என்றும், சிபிஐ விசாரணை நடத்தினாலும் தவறு இல்லை என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com