அ.தி.மு.க. ஆட்சியில் எங்கும் ஊழல் நிறைந்திருக்கிறது: துரைமுருகன்

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் எங்கும் ஊழல் நிறைந்து காணப்படுகிறது என்று பெருந்துறையில் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார்.
மாநாட்டு திடலை தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் பார்வையிட்ட காட்சி.
மாநாட்டு திடலை தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் பார்வையிட்ட காட்சி.
Published on

பெருந்துறையை அடுத்துள்ள கோவை மெயின் ரோடு, சரளை பகுதியில் வருகிற மார்ச் 24 மற்றும் 25-ந் தேதி தி.மு.க. மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை கவனிக்க 20 குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தந்த குழுவினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்த பணிகளை பார்வையிடுவதற்காக கட்சியின் முதன்மை செயலாளர் துரை முருகன் நேற்று மாநாடு நடைபெறும் திடலுக்கு வந்திருந்தார். அவரை மாநாட்டுத் தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையிலான மாநாட்டு பொறுப்பாளர்கள் வரவேற்றனர்.

மாநாட்டிற்கான நிதியாக நிதிக்குழுத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி ரூ.25 லட்சமும், கோவை வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம் ரூ.10 லட்சமும், கரூர் பரணி மணி ரூ.10 லட்சமும் வழங்கினர்.

இதன் பின்னர் துரை முருகன் மாநாட்டு திடலில் மாநாட்டு மேடை அமையும் இடத்தை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-


செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் முதன் முதலாக இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை வரலாறு காணாத வெற்றியாக மாற்றி காட்டுவது நமது கடமை. இந்த மாநாட்டிற்காக இங்கு 300 ஏக்கர் பரப்பரளவில் மாநாட்டுத்திடல் அமையவுள்ளது.

இந்த மாநாட்டில் சுமார் 7 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 10 லட்சத்திற்கும் மேல் தொண்டர்கள் இங்கு வந்து குவிந்து விடுவர் என்பது எனது கருத்து.

ஏனென்றால் நமது கட்சியில் நீண்ட நாட்களுக்கு பின்னர் நடைபெறும் மாநாடு இது. இந்த மண்டல மாநாடு மாநில மாநாட்டையே மிஞ்சும் அளவில் இருக்கப் போகிறது.

தற்போது தமிழகத்தில் ஆட்சி என்ற பெயரில் ஒரு கும்பல் கொள்ளையடித்து வருகிறது. அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு அந்தந்த துறை பற்றிய அறிவு இல்லை, அவர்கள் அனைவரும் கமி‌ஷன் வந்தால் போதும் என்று நினைக்கும் கட்டிங் பார்ட்டிகள்.

தமிழகத்தில் எங்கும் ஊழல் நிறைந்து காணப்படுகிறது. தற்போது உள்ள தமிழகத்தின் தண்ணீர் தேவையை கூட கணக்கிடாமல் கர்நாடகாவில் போய் தண்ணீர் கேட்போம் என்று கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com