

சென்னை:
தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி, கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார்.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பா.ஜ.க. புகார் தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக, பா.ஜ.க. மாநில செயலாளர் வானதி சீனிவாசன் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளார்.
இதற்கிடையே, முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் தொடர்பாக அதன் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்துள்ளது.
உதயநிதி ஸ்டாலினிடம் பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் வரும் 19-ம் தேதி விசாரணை நடத்த உள்ளார்.
சாஸ்திரிபவனில் உள்ள அலுவலகத்தில் இந்த விசாரணை நடக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், முரசொலி அலுவலக நில விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியல் இனத்தவர் ஆணைய அலுவலகத்தில் முரசொலி அறங்காவலரும், தி.மு.க. அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். விசாரணையின்போது, தலைமை செயலாளர் சண்முகமும் ஆஜராகினார்.