அ.தி.மு.கவை வெல்ல யாரும் பிறக்கவில்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
திண்டுக்கல்லில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டுப்பாளையத்தில் இருந்து காரில் திண்டுக்கல் சென்றார்.
வழியில் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே சென்றபோது, அங்கு அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவரிடம் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
ஜனநாயக நாட்டில் அனைவரும் அரசியலுக்கு வரும் உரிமை உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் என்ன சொல்லியிருக்கிறார் என்று எனக்கு முழுமையாக தெரியவில்லை. அவரது பேச்சை இன்னும் முழுமையாக கேட்கவில்லை. அவரது பேச்சை முழுமையாக கேட்டு கருத்து கூறுகிறேன் என்றார்.
ஒரு வருடமாக தமிழக அரசியல் சூழ்நிலை (சிஸ்டம்) சரியில்லை என்று ரஜினி கூறியிருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அவர், அது ரஜினிகாந்தின் தனிப்பட்ட கருத்து. இப்போது தான் அவர் அரசியலுக்கு வருவதாக கூறியிருக்கிறார். 2021-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில்தான் போட்டியிடுவேன் என்று கூறியிருக்கிறார்.
ரஜினி வருகையால் அ.தி. மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்விக்கு, இரு பெரும் தலைவர்கள் உருவாக்கிய அ.தி.மு.க. இன்று உயிரோட்டமாக இருக்கிறது. அ.தி.மு.க.வை வெல்ல யாரும் பிறந்ததும் இல்லை. பிறக்கப்போவதும் இல்லை.

