சனாதனம் பற்றி ஒரு வார்த்தைனாலும் யோசிச்சு பேசனும்.. கார்த்திக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை..!

திருப்பதியில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம் என்று கார்த்தி கூறியது சர்ச்சையானது.
karthi - pawan kalyan - laddu
Published on

கார்த்தி - அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் படம் தெலுங்கு மொழியில் 'சத்யம் சுந்தரம்' என்ற பெயரில் வெளியாகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார்.

அப்போது கார்த்தியின் பிரபல காமெடி காட்சியான கண்ணா லட்டு தின்ன ஆசையா காமெடியின் புகைப்படத்தை திரையில் போட்டு காண்பித்து கார்த்தியிடம் லட்டு வேண்டுமா என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு கார்த்தி, "லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம். எனக்கு லட்டே வேண்டாம் 'என கிண்டலாக கூறினார்.

லட்டு குறித்து கார்த்தி கிண்டலாக பேசியதற்கு ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் காட்டமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "நான் தற்போது ஒரு சினிமா நிகழ்ச்சியில் பார்த்தேன். லட்டு குறித்து பேசினால் சர்ச்சையாகும் என கூறியுள்ளனர். அவ்வாறு சொல்லக் கூடாது. நான் உங்களை நடிகர்களாக மதிக்கிறேன். ஆனால் சனாதன தர்மத்தை பற்றி பேசும் போது, ஒன்றுக்கு 100 முறை யோசித்து பேச வேண்டும்" என தெரிவித்தார்.

இதனையடுத்து லட்டு குறித்து பேசியதற்கு கார்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், "மரியாதைக்குரிய பவன் கல்யாண் அவர்களே, லட்டு குறித்து நான் பேசியதால் ஏற்பட்ட தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். திருப்பதி பெருமாளின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நமது மரபுகளை கடைப்பிடித்து வருகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியின் போது விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனால் ஏழுமலையான் கோவிலில் நேற்று மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com