விளையாட்டு

தொடர் போராட்டங்களை கடந்து சர்வதேச போட்டிகளில் சாதனை - ஈரான் கோல்கீப்பர் கடந்து வந்த பாதை

கார் கழுவுதல், பீட்சா கடை ஊழியர் மற்றும் ஆடை தொழிற்சாலை ஊழியர் உள்ளிட்ட பல வேலைகளை அலிரேசா பெயிரன்வந்த் செய்து வந்தார்.

ஈரான் கோல்கீப்பர் அலிரேசா பெயிரன்வந்த்:

ஈரான் கால்பந்து அணியின் நட்சத்திர கோல்கீப்பர் வீரராக 33 வயதான அலிரேசா பெயிரன்வந்த் விளையாடி வருகிறார்.

இவர் தனது குழந்தை பருவம் முதலே ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அதன்பிறகு தனது ஓய்வு நேரத்தை உள்ளூரில் நடக்கும் போட்டிகளில் செலவிட்டு வந்தார்.

இவர் தனது சிறுவயதில் கால்பந்து கனவை அடைவதற்காக சொந்த ஊரில் இருந்து தெஹ்ரான் நகருக்கு சென்றார். அங்கு பிழைப்பதற்காக பணம் இல்லாத காரணத்தால், பூங்காக்களை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளராக பணிபுரிந்து வந்தார்.

மேலும் கார் கழுவுதல், பீட்சா கடை ஊழியர் மற்றும் ஆடை தொழிற்சாலை ஊழியர் உள்ளிட்ட பல வேலைகளை செய்து வந்தார்.

அவரது இடைவிடாத விடாமுயற்சியின் காரணமாக, இறுதியில் தொழில்முறை லீக்குகளில் கலந்துகொண்டு, சர்வதேச நட்சத்திர வீரராக உருவெடுத்தார்.

இவர் தென்கொரியாவுக்கு எதிராக கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த போட்டியில், 61 மீட்டர் தொலைவில் கால்பந்தை எறிந்து கின்னஸ் சாதனை படைத்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கிளப் போட்டியில், கால்பந்தை 78 மீட்டர் தூரத்திற்கு கிக் செய்து, மேலும் ஒரு கின்னஸ் சாதனை படைத்தார்.

இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று நடைபெற்ற பிஃபா உலகக்கோப்பை போட்டியில், பெல்ஜியம் அணிக்கு எதிராக விளையாடிய ஈரான் அணி, ஆட்டத்தை இறுதியில் சமனில் முடித்தது.

இந்த போட்டியில் பெல்ஜியம் அணி வீரர்கள் அடித்த ஏழு கோல்களையும் தடுத்து, 90 நிமிடங்க்கள் ஒரு கோல் கூட போட விடாமல், மீண்டும் தனது திறமையை அலிரெஸா பெயிரன்வந்த் நிலைநாட்டினார்.

இந்த போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியதற்காக, ‘ஆட்டத்தின் சிறந்த வீரர்’ என்ற விருதை NBA வீரர் டேரியஸ் கார்லண்ட்-இடம் இருந்து அலிரெஸா பெற்றார்.

ஈரான் கால்பந்து அணியின் அடுத்த ஆட்டம், எகிப்துக்கு எதிராக வரும் வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் சியாட்டில் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.