இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ஒரு மூத்த முதல் தர அணியை வழிநடத்திய வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி இதன் மூலம் பெற்றார்.
துலீப் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் பெங்களூருவில் சென்ட்ரல் ஜோன் மற்றும் ஈஸ்ட் ஜோன் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் ஈஸ்ட் ஜோன் அணியின் கேப்டன் இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங் செய்தபோது வலது மணிக்கட்டில் பலத்த காயம் அடைந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து, அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி தற்காலிக கேப்டனாகப் பொறுப்பேற்று அணியை வழிநடத்தினார்.
இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ஒரு மூத்த முதல் தர அணியை வழிநடத்திய வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி இதன் மூலம் பெற்றார். முகமது ஷமி, முகேஷ் குமார், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்கள் நிறைந்த அணியை 15 வயதில் ஒரு சிறுவன் வழிநடத்தியது மட்டுமன்றி, சரியான முறையில் நடுவரின் முடிவை எதிர்த்துமேல்முறையீடு செய்து விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.
கேப்டன்சி தவிர பேட்டிங்கிலும் வைபவ் சூர்யவன்ஷி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். சென்ட்ரல் ஜோன் அணிக்கு எதிரான இப்போட்டியில் வெறும் 42 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 7 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 81 பந்துகளில் 92 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம், துலீப் கோப்பை வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் (15 ஆண்டுகள் 175 நாட்கள்) அரைசதம் அடித்த வீரர் என்ற 57 ஆண்டுகால சாதனையை (1969-ல் லக்ஷ்மன் சிங் படைத்த சாதனை) முறியடித்துள்ளார்.