

மகளிர் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 94 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்திய அணியின் அனுபவமிக்க ஆல்-ரவுண்டரான தீப்தி சர்மா, மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 171 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார்.
இந்திய அணிக்காக தனது 150-ஆவது டி20 சர்வதேச போட்டியில் விளையாடியபோது தீப்தி ஷர்மா இந்த சாதனையை எட்டினார். ஹர்மன்ப்ரீத் கௌர் (203) மற்றும் ஸ்மிருதி மந்தனா (172) ஆகியோருக்கு பிறகு, 150 போட்டிகள் என்ற மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்திய வீராங்கனை இவராவார்.
வரலாற்றிலேயே 150 அல்லது அதற்கு மேற்பட்ட டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய 12-வது பெண் கிரிக்கெட் வீராங்கனை இவராவார்.
வலது கை ஆஃப்-ஸ்பின்னரான தீப்தி, தாய்லாந்துக்கு எதிரான 'குரூப் ஏ' பிரிவு ஆட்டத்தில் 1.1 ஓவர்கள் வீசி, ஒரு மெய்டன் ஓவருடன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி, ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இது ஒரு பெருமைக்குரிய தருணம் என்று குறிப்பிட்ட தீப்தி, அதேவேளையில் தனது பந்துவீச்சை மேம்படுத்துவதிலும் அணிக்கு தனது பங்களிப்பை வழங்குவதிலும் மட்டுமே கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.
"150 விக்கெட்டுகளை கடந்ததை விட, இந்திய சின்னம் பொறித்த இந்திய அணியின் சீருடையை அணிவதே பெருமைக்குரிய உணர்வாக இருக்கிறது. ஒரு இந்திய வீராங்கனையாக சரியான விஷயங்களை செய்வதே முக்கியம்.
யாருக்கு எதிராக விளையாடப் போகிறோம் என்பதை பற்றி நான் சிந்திப்பதில்லை. எப்படி இன்னும் சிறப்பாக செயல்படலாம் மற்றும் எனது பந்துவீச்சு பிரிவுக்கு எப்படி உதவலாம் என்பதிலேயே கவனம் செலுத்துகிறேன்," என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "'சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்'-இல் நடைபெற்ற முகாம் எங்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது; நாங்கள் ஆசிய கோப்பையை வெல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம்," என்றார்.