சூர்யவன்ஷி- கல்லினன் சூர்யவன்ஷி- கல்லினன்
கிரிக்கெட்

வைபவ் சூரியவன்ஷியின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் காயங்கள்: கல்லினன் எச்சரிக்கை

சச்சின் தெண்டுல்கர் முழங்கை காயத்தால் அவதிப்பட்டதால், அவரது நீண்ட கால கிரிக்கெட் வாழ்க்கை சற்று முன்னதாகவே முடிவுக்கு வந்ததாக கல்லினன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் 15 வயது சிறுவனான வைபவ் சூரியவன்ஷி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இலங்கையில் முடிவடைந்த `ஏ' அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் 94 ரன்கள் குவித்து அசத்தினார்.

அவர் இங்கிலாந்து தொடருக்கான டி20 அணியில் இடம் பிடித்துள்ளார். ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடி தொடர் நாயகன் விருதை வென்றார். இவர் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து விளையாடினால் காயத்தால் கிரிக்கெட் வாழ்க்கையை இழக்க வேண்டியிருக்கும் என தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் கல்லினன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக கல்லினன் கூறியதாவது:-

இந்த இளம் வீரரை (சூர்யவன்ஷி) பார்த்து நான் வியக்கிறேன். எனக்கு என்ன கவலை என்றால், அவருடைய காயம் பற்றி யாரும் பேசவில்லை என்பதுதான். 15 வயதில் பேட்டை சுழற்றுகிறார். அதிக அளவிலான போட்டியில் விளையாடுகிறார். நான் அவருடைய மணிக்கட்டு, முழங்கை போன்றவற்றை பார்த்து பயப்படுகிறேன். மருத்துவம் தொடர்பான கருத்துகள் என்ற கூறுகின்றன?. மோசமான முழங்கை காயம் காரணமாக சச்சின் கிரிக்கெட் வாழ்க்கை சற்று குறைந்து போனது.

அவர் ஒரு மிகக் கடுமையான பயிற்சி முறையைப் பின்பற்றி வருகிறார் என்றுதான் நான் நினைக்கிறேன். அவர் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறார். அதேபோல அவரது மூட்டுகள், தசைநார்கள் மற்றும் தசைகளும் வளர்ந்து கொண்டிருக்கின்றன அல்லவா? அவற்றின் மீது நிச்சயம் அதிக அழுத்தம் இருக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

மணிக்கட்டில் நாள்பட்ட பாதிப்புகளுக்கு ஆளான பலரை எனக்குத் தெரியும். சொல்லப்போனால், நாங்கள் அப்போது எடை குறைந்த மட்டைகளைப் பயன்படுத்தினோம்; கிரிக்கெட் விளையாடிய அளவும் மிகக் குறைவுதான். அவன் இன்னும் வளர்ந்து வரும் பருவத்தில் இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தற்போதைய பயிற்சி மற்றும் உடல் மீட்பு முறைகள் உதவக்கூடும் என்றாலும், அவனது நீண்டகால எதிர்காலம் மற்றும் உடல்நலம் குறித்து எனக்குக் கவலையாக இருக்கிறது.

இவ்வாறு கல்லினன் தெரிவித்துள்ளார்.