இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஏ ஒருநாள் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற 6-வது லீக் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. தம்புல்லாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 322 ரன்கள் குவித்தது. அவிஷ்கா பெர்னாண்டோ சதமடித்து 110 ரன்னில் அவுட்டானார். நிரோஷன் டிக்வெலா 66 ரன்னில் வெளியேறினார். நுவானிடு பெர்னாண்டோ 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் பரிதூன் தாவூத்சாய் 4 விக்கெட்டும், பர்மனுல்லா சபி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹாசன் எசாகில் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 78 ரன்னில் அவுட்டானார். பர்மனுல்லா சபி 43 ரன்னும், பஹீர் ஷா 35 ரன்னும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் அவுட்டாகினர்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 42.5 ஓவரில் 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இலங்கை அணி சார்பில் துலஜ் சமுதிதா 5 விக்கெட்டும், குகதாஸ் மாதுலன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்திய அணியுடன் மோத உள்ளது.