கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது பாகிஸ்தான்

பாகிஸ்தானின் பாத்திமா சனா, ஆயிஷா ஜாபர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் உள்ளன.

பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் ஒரு வெற்றிகூட பெறவில்லை.

இந்நிலையில், பாகிஸ்தான் அணி இன்று நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் குல் பெரோசா 63 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆயிஷா ஜாபர் 32 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது. பாபெட் டி லீட் 30 ரன்னும், ஹீதர் சீகர்ஸ் 24 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், நெதர்லாந்து அணி 18 ஓவரில் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது.

நெதர்லாந்து அணி தான் ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் ஏற்கனவே உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.