திருச்செந்தூர் 
வழிபாடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேகம்

வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேகம் இன்று காலையில் நடந்தது.

அபிஷேகம்

வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் கோவில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசங்கள் கோவில் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு காலை 8.20 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டது.

மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்கு பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளியம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.