தாழக்குடியில் பிரசித்தி பெற்ற அழகேஸ்வரி ஜெயந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது.
அதன் பிறகு 4 நாட்கள் தொடர்ந்து ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்று வந்தது. மேலும் சுவாமிக்கு தீபாராதனையும் காட்டப்பட்டது.
இரவில் கலைநிகழ்ச்சி, பக்தி மெல்லிசையும் நடத்தப்பட்டது. 5-ம் நாளான நேற்று மகா கும்பாபிஷேகத்தையொட்டி காலையில் சதுர்வேத பாராயணம், திருமுறை பாராயணம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடந்தன. பின்னர் யாகசாலையில்வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து புனிதநீர் ராஜகோபுரத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதன் பிறகு அழகேஸ்வரி ஜெயந்தீஸ்வரர் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை சிவஸ்ரீ பரமேஸ்வரபட்டர் நடத்தினார்.
கும்பாபிஷேக விழாவில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தளவாய் சுந்தரம், நாகர்கோவில் முன்னாள் மேயர் மகேஷ், த.வெ.க. மாவட்ட செயலாளர் மாதவன், கோவில் ஸ்ரீ காரியம் சேம ராஜா கண்காணிப்பாளர் சிவக்குமார், சென்னை ராஜலட்சுமி கல்வி குழுமம் தாளாளர் மேகநாதன் பெங்களூர் லேப்சில்குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் சி.இ.ஓ. பரசு பிள்ளை, தாழக்குடி பேரூராட்சி மன்ற தலைவரும், கும்பாபிஷேக திருப்பணி குழு தலைவருமான சிவக்குமார் துணைத் தலைவர் சுப்பிரமணிய சதீஷ் செயலாளர் குமரப்பெருமாள் பிள்ளை, கவுன்சிலர் இரவி பிள்ளை பொருளாளர் சிவம் மற்றும் கௌரவ ஆலோசகர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அபிஷேகமும், மாபெரும் அன்னதானமும், தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் அழகேஸ்வரிஜெயந்தீஸ்வரர் சுவாமி திருக்கல்யாணமும், இரவு பஞ்சமூர்த்திவீதிஉலா வருதலும் நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாட்டை திருக்கோவில் நிர்வாகம், மற்றும் கும்பாபிஷேக திருப்பணிக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.