வழிபாடு

ஜேஷ்டாபிஷேகம் 2-வது நாள்: மலையப்பசாமி முத்துக்கவச அலங்காரத்தில் வீதிஉலா

மலையப்பசாமிக்கு முத்துக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே முத்துக் கவசம் அலங்காரம் நடைபெறும்.

மாலை மலர்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 6.30 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் சம்பங்கி பிரகாரத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு காலை 8 மணியளவில் அர்ச்சகர்கள் மற்றும் வேத பாராயணம் செய்பவர்கள் மகாசாந்தி ஹோமம் நடத்தினர். பின்னர் காலை 9 மணியில் இருந்து காலை 11 மணி உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை மலையப்பசாமிக்கு முத்துக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. சஹஸ்ர தீபலங்கார சேவையில் மலையப்பசாமி பங்கேற்றார். மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6.30 மணிவரை உற்சவர் மலையப்பசாமி முத்துக்கவசம் அணிந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே முத்துக் கவசம் அணிந்த மலையப்பசாமியின் அழகை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.