விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் மண்சோறு சாப்பிட்ட போது எடுத்த படம். 
ஆன்மிகம்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மாலை மலர்

விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் ஜெகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் பக்தர்கள் மாலை அணிந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு யாத்திரை செல்வது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு யாத்திரை செல்லும் பக்தர்கள் கடந்த 26-ந்தேதி மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கினர்.

இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக ஜெக முத்து மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஜெகமுத்துமாரியம்மனை, பக்தர்கள் ஜங்ஷன் சாலை, பாலக்கரை, கடைவீதி, தென்கோட்டை வீதி வழியாக விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் மீனாகுமாரி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மண்சோறு சாப்பிட்டார்.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஜங்ஷன் சாலையில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். பின்னர் பக்தர்கள் இருமுடி கட்டி சமயபுரத்திற்கு செல்ல உள்ளனர்.