ஏமன் நாட்டின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள செங்கடலின் பெரும்பகுதியையும் மற்றும் முக்கிய வர்த்தக போக்குவரத்து தளமான பாப் அல்-மண்டே ஜலசந்தியை சுற்றியுள்ள பகுதிகளையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் கைப்பற்றியதை தொடர்ந்து, எகிப்தின் உதவியை சவுதி அரேபியா நாடியுள்ளது.
சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள எண்ணெய் உற்பத்தி பகுதிகளில் இருந்து செங்கடல் துறைமுகமான யான்பு வரையில் 1,200 கிலோ மீட்டர் நீளத்தில் எண்ணெய் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
செங்கடல் வழித்தடமானது சூயஸ் கால்வாய் வழியாக மத்தியதரைக் கடலை இந்திய பெருங்கடலுடன் இணைக்கிறது. மேலும் ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே பயணிக்கும் வர்த்தக கப்பல்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு சவுதி அரேபியாவுக்கு, பாப்-அல்-மண்டேப் ஜலசந்தி முக்கிய வர்த்தகம் போக்குவரத்து மையமாக விளங்குகிறது.
இதையடுத்து செங்கடல் துறைமுகமான மோக்காவையும், பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியை சுற்றியுள்ள பகுதிகளையும், மேலும் மேற்கு ஏமனில் அமைந்துள்ள முக்கிய நகரங்களையும் கடந்த வாரம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.
சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
இந்த திட்டத்தின் மூலம் ஏதாவது ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மற்ற உறுப்பு நாடுகள் பதில் தாக்குதல் நடத்தும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சவுதி அரேபியா, பாகிஸ்தானின் உதவியை நாடியது. அப்போது ஹவுதிகளுக்கு எதிரான தாக்குதலை நடத்த பாகிஸ்தான் தனது படைகளை அனுப்ப மறுத்துவிட்டது.
மேலும் வெளிநாட்டு மண்ணில் போர் நடவடிக்கைகளை தவிர்த்து, சவுதி அரேபியா தனது நாட்டை பாதுகாத்து கொள்ள தனது படைகளை பயன்படுத்தலாம் என்று பாகிஸ்தான் கூறியது.
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நேரடி தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவின் உதவியை சவுதி அரேபியா நாடியது. இந்த முயற்சியும் பலனளிக்காமல் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று எகிப்து நாட்டிற்கு பயணம் செய்து, அந்நாட்டின் அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிஸ்ஸியை சந்தித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சவுதி இளவரசர், கடல்வழி போக்குவரத்தின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான தங்களின் உறுதியை இருதரப்பினரும் உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து எகிப்து அரசாங்க கூறுகையில், சவுதி அரேபியாவுக்கு எகிப்து அசைக்க முடியாத ஆதரவை அளிப்பதாக தெரிவித்தது.