புதின், பாவெல் 
உலகம்

பயங்கரவாதத்திற்கு உதவியதாக டெலிகிராம் நிறுவனருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த ரஷியா

பிரான்சிலும் துரோவ் மீது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

டெலிகிராம் நிறுவனம், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் மீது பயங்கவரத்திற்கு உதவி செய்வதாக குற்றம்சாட்டி சர்வதேச பிடிவாரண்ட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது ரஷியா.

ரஷியாவில் பிறந்த பாவெல் தற்போது பிரஞ்சு, ஐக்கிய அரபு அமீரக குடியுரிமையைக் கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார்.

ரஷியா

ரஷியாவின் பரவலாக பயன்படுத்தப்படும் ஊடகங்களில் ஒன்றாக டெலிகிராம் உள்ளது. ரஷிய அரசு டெலிகிராமில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க முயன்று வருகிறது. பயனர்கள் தரவுகளை அரசுடன் பகிர்ந்துகொள்ள துரோவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் ரஷிய மக்களை அரசு ஆதரவு பெற்ற MAX என்ற தகவல் பரிமாற்ற செயலிக்கு மாறவும் ரஷிய அரசு ஊக்குவித்து வருகிறது.

இந்த சூழலில் ரஷியாவின் பாதுகாப்பு அமைப்பான பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (FSB) துரோவை கைது செய்ய சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

குற்றச்சாட்டு

துரோவ், பயங்கரவாத செயல்பாடுகளுக்கு உதவி செய்வதாக FSB குற்றம்சாட்டியுள்ளது. மேலும் உக்ரைனிய உளவு அமைப்புகளும், பயங்கரவாத குழுக்களும் பயன்படுத்தும் வகையில் டெலிகிராமில் உள்ள உள்ளடக்கங்களை அந்நிறுவனம் நீக்கத் தவறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

FSBயின்படி, ரஷியாவுக்குள் ஆட்களை பணிக்கு எடுக்கவும், நாசவேலைகளை ஒருங்கிணைக்கவும் , பயங்கரம், படுகொலைகள் மற்றும் சைபர் மோசடிகளை அரங்கேற்றவரும் டெலிகிராம் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட தகவல்களையும் டெலிகிராமில் இருந்து நீக்க துரோவ் தவறிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்ச்சாட்டுகள் குறித்தும் கைது வாரண்ட் குறித்தும் பாவெல் துரோவ் தரப்பில் இன்னும் எந்த பதிலும் இல்லை. அழுத்தத்திற்கு மத்தியிலும் டெலிகிராம் தொடர்ந்து அதிகம் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற ஊடகங்களில் ஒன்றாக நீடித்து வருகிறது.

குறிப்பாக 2022 முதல் நடைபெற்று வரும் ரஷியா உக்ரைன் போரில் இரு தரப்பிலும் டெலிகிராம் தகவல் பரிமாற்றத்துக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது பல அதிகாரபூர்வ பதிவுகளை தனது டெலிகிராம் கணக்கின் வழியே வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் டெலிகிராம் செயலி சட்டவிரோத உள்ளக்கடகங்களை கொண்டுள்ளதாக துரோவ் மீது பிரான்சிலும் துரோவ் மீது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.