உலகம்

டாடா குழுமத்தில் அதிரடி மாற்றம்! RNT அசோசியேட்ஸ் இயக்குநர் ராஜினாமா!

ரத்தன் டாடாவின் லட்சியங்களை நிறுவனம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வாழ்த்து!

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நீண்டகால நண்பரும், டாடா அறக்கட்டளைகளின் முன்னாள் பொறுப்பாளருமான மெஹ்லி மிஸ்திரி, ரத்தன் டாடாவின் சொந்த முதலீட்டு நிறுவனமான ‘ஆர்என்டி அசோசியேட்ஸ்’ இயக்குநர் பதவியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார்.

₹1,000 கோடி முதலீட்டு நிறுவனம்..

ஓலா எலக்ட்ரிக் மற்றும் அர்பன் கம்பெனி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் பங்குகளைக் கொண்டுள்ள ஆர்என்டி அசோசியேட்ஸ் நிறுவனம், ரூ.1000 கோடிக்கும் அதிகமான முதலீட்டுப் பங்குகளை நிர்வகித்து வருகிறது.

விலகியதற்கான காரணம்..

ரத்தன் டாடாவின் உயிலின்படி, அவரது தனிப்பட்ட அறக்கட்டளை மற்றும் பவுண்டேஷன்களின் பொறுப்புகள் புதிய நிர்வாகிகளிடம் மாற்றப்பட்டு வருகின்றன.

மெஹ்லி மிஸ்திரி ஏற்கனவே ரத்தன் டாடா எண்டோமென்ட் டிரஸ்ட் மற்றும் பவுண்டேஷனில் இருந்து விலகிவிட்டதால், விதிமுறைப்படி இந்த முதலீட்டு நிறுவனத்தின் இயக்குநர் பதவியையும் புதிய பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

ராஜினாமா கடிதம்..

தனது மற்ற பணி கமிட்மெண்ட்கள் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மெஹ்லி மிஸ்திரி, தனது விலகல் கடிதத்தை ஜூன் 30அன்று சமர்ப்பித்தார்.

இது நேற்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. ரத்தன் டாடாவின் நோக்கங்களை இந்நிறுவனம் தொடர்ந்து சிறப்பாகக் கொண்டு செல்ல வாழ்த்துவதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.