ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த பிப்ரவரி 28 தொடங்கிய போருக்கு தீர்வு எட்டுவதில் இழுபறி நீடிக்கிறது.
ஈரான் - அமெரிக்கா சம்மதத்துடன் 2 வார போர் நிறுத்தம் கடந்த ஏப்ரல் 22 உடன் முற்று பெற்றது. இதற்கிடையே பாகிஸ்தானில் வைத்து ஏப்ரல் 11-12 தேதிகளில் நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
போர் பதற்றத்தைத் தணிப்பதற்கான மிக முக்கியமான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று தொடங்க இருந்தது.
இதற்காக இதற்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் பாகிஸ்தான் சென்றனர்.
அப்பாஸ் அரக்சி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை சந்தித்து கலந்துரையாடினார். பாகிஸ்தான் ராணுவ தலைவர் அசிம் முனீரையும் அவர் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறவிருந்த ஈரான் - அமெரிக்கா இடையிலான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை, எந்தவொரு முன்னேற்றமும் இன்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
அமெரிக்கத் தூதுக்குழுவினரை நேரடியாகச் சந்திக்க ஈரான் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியம் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.
தனது அதிகாரப்பூர்வ கோரிக்கை பட்டியலைப் பாகிஸ்தானிடம் ஒப்படைத்துவிட்டு, அரக்சி தனது குழுவினருடன் ஓமன் மற்றும் ரஷியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஈரானின் பிடிவாதமான போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
அவர் வெளியிட்ட ட்ரூத் சோஷியல் பதிவில், "அங்கு செல்வதற்கு 18 மணிநேரம் விமானத்தில் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களிடம் தான் அனைத்து துருப்புச் சீட்டுகளும் உள்ளன.
அவர்களுக்குப் பேச வேண்டுமென்றால் எப்போது வேண்டுமானாலும் எங்களை அழைக்கலாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஈரானியத் தலைமையிடம் முறையான ஒருங்கிணைப்பு இல்லை என்றும், அங்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதே தெரியவில்லை என்றும் டிரம்ப் தனது பதவில் சாடியுள்ளார்.