விபத்து 
உலகம்

கத்தார் எரிவாயு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. 54 பேர் படுகாயம் - 18 பேர் மாயம்

உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்காக பொறியாளர்கள் ஆலையைத் திறக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டது.

கத்தாரில் அமைந்துள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 54 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 18 பேர் மாயமாகி உள்ளனர்.

கத்தாரின் ராஸ் லபான் நகரில் அமைந்துள்ள பர்சான் எரிவாயு விநியோக ஆலையில் நேற்று (ஜூன் 21) இரவு இந்த பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

கரும்புகை

வெடிவிபத்தின் தாக்கத்தால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அடர்ந்த கரும்புகை சூழ்நத்து.

பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஆலையின் உள்ளே ஏற்பட்ட இந்த விபத்தில் 54 தொழிலாளர்கள் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கத்தார் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாயம்

மேலும் விபத்தின் போது ஆலைக்குள் இருந்த மேலும் 18 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர்.

மீட்புக் குழுவினர் ஆலையின் இடிபாடுகளுக்கு இடையே அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களால் இந்த ஆலை கடுமையாகச் சேதமடைந்து, பல வாரங்களாக மூடப்பட்டிருந்தது.

காரணம்

உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்காக பொறியாளர்கள் ஆலையைத் திறக்க முயன்ற போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் நச்சு வாயுக்கசிவு எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.