உலகம்

உஸ்பெக்கில் லால் பகதூர் சாஸ்திரிக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி

ஜனாதிபதி மாளிகை தோட்டத்தில் ஒரு மரக்கன்றை நட்டனர் என்று வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தாஷ்கண்டில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் சாஸ்திரி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தியதுடன், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் இணைந்து ஒரு மரக்கன்றை நட்டார்.

சாஸ்திரியின் 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற காலத்தால் அழியாத முழக்கம் தலைமுறை தலைமுறையாக ஊக்கமளித்து வருகிறது என்று வெளியுறவு அமைச்சகம் கூறியதுடன், அவரது வாழ்க்கை எளிமை, தைரியம் மற்றும் தேசப்பற்றை உள்ளடக்கியதாக இருந்தது என்றும் குறிப்பிட்டது.

மரக்கன்று நட்டார் பிரதமர் மோடி:

இந்தியாவின் இரண்டாவது பிரதமரான சாஸ்திரி, 1965-ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வரலாற்று சிறப்புமிக்க தாஷ்கண்ட் பிரகடனத்தில் கையெழுத்திட்ட சில மணிநேரங்களுக்கு பிறகு, 1966 ஜனவரி 11 அன்று உஸ்பெக் தலைநகரில் திடீரென காலமானார்.

இந்தியாவின் 'ஏக் பேத் மா கே நாம்' முன்முயற்சி மற்றும் உஸ்பெகிஸ்தானின் 'யாஷில் மாகோன்' பசுமை முயற்சிகளின் கீழ், பிரதமர் மோடியும் மிர்சியோயேவும் இணைந்து ஜனாதிபதி மாளிகை தோட்டத்தில் ஒரு மரக்கன்றை நட்டனர் என்று வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

அந்தப் பதிவில், "இந்த நடவடிக்கை, பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை வளர்ப்பதில் இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தானின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மரம் நடும் விழா:

உஸ்பெகிஸ்தானுக்கான தனது இரண்டு நாள் அரசுமுறை பயணத்தின் ஒரு பகுதியாக, குக்சரோய் ஜனாதிபதி மாளிகையில் மிர்சியோயேவுடன் பிரதமர் மோடி தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மரம் நடும் விழா நடைபெற்றது.

இரு தலைவர்களும், இருதரப்பு மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவது தொடர்பாக, வர்த்தகம் மற்றும் முதலீடு, புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் யு.பி.ஐ., பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மருந்து தொழில், முக்கிய கனிமங்கள், விவசாயம், கல்வி, சுற்றுலா, விண்வெளி மற்றும் மக்கள் பரிமாற்றங்கள் உள்ளிட்ட விரிவான கலந்துரையாடல்களை நடத்தினர்.

முன்னதாக இன்று, உஸ்பெகிஸ்தான் யோகா கூட்டமைப்பு நடத்திய யோகா அமர்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பிரதமர் சனிக்கிழமை தாஷ்கண்ட் வந்தடைந்தார், விமான நிலையத்தில் அவருக்கு மிர்சியோயேவ் உற்சாகமான வரவேற்பு அளித்தார்.