ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும், அதன் ஒரு பகுதியாக பல்வேறு இருதரப்பு சந்திப்புகளை நடத்துவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி கிர்கிஸ்தான் சென்றடைந்தார்.
விமான நிலையத்தில் அமைச்சரவையின் தலைவரான கசிமாலியேவ் அடில்பெக் அலேஷோவிச் அவரை வரவேற்றார். பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக விமான நிலையத்தில் பாரம்பரிய கிர்கிஸ் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
"26-ஆவது SCO தலைவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிஷ்கெக் வந்துள்ளார். கிர்கிஸ் குடியரசின் அமைச்சரவை தலைவரான திரு. அடில்பெக் கசிமாலியேவ் அவரை வரவேற்றார்.
பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்த உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்காக, பத்து உறுப்பு நாடுகள், பதினைந்து கூட்டாளர் நாடுகள் மற்றும் இரண்டு பார்வையாளர் நாடுகளை SCO உச்சிமாநாடு ஒன்றிணைக்கிறது," என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒரு ஹோட்டலுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு 'வந்தே மாதரம்' முழக்கங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 'மா துஜே சலாம்' என்ற தேசபக்திப் பாடலின் இசைக்கு ஏற்ப நடைபெற்ற உற்சாகமான யோகா நிகழ்ச்சியையும் அவர் பார்வையிட்டார். ஹோட்டலுக்கு வந்தடைந்தபோது, சிவபெருமானை மையமாகக் கொண்ட கலாச்சார நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் 26-ஆவது SCO உச்சிமாநாட்டில் பங்கேற்க, அதிபர் சதிர் ஜபரோவின் அழைப்பின் பேரில் மோடி கிர்கிஸ்தான் சென்றுள்ளார். 10 உறுப்பினர்களை கொண்ட SCO அமைப்பு தனது 25-ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.
சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளால் 2001-இல் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. பின்னர் 2017-இல் இந்தியாவும் பாகிஸ்தானும் முழு உறுப்பினர்களாக இணைந்தன; அதைத் தொடர்ந்து 2023-இல் ஈரானும், 2024-ல் பெலாரஸும் இதில் இணைந்தன.
உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, கிர்கிஸ் அதிபர் ஜபரோவ் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட SCO தலைவர்களுடன் மோடி இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.