பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பரூகாபாத் பகுதியில் அமைந்துள்ள 125 ஆண்டுகள் பழமையான குருத்வாரா இடிக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
பரூகாபாத்தில் அமைந்துள்ள சிங் சபா சாஹிப் என்ற அந்த புகழ்பெற்ற குருத்வாரா அமைந்துள்ளது.
குருத்வாரா இடிக்கப்பட்ட செய்தி அறிந்து பாகிஸ்தானில் வாழும் உள்ளூர் சீக்கிய சமூகத்தினர் வீதிகளில் இறங்கிப் பிரம்மாண்டப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
ஒரு உள்ளூர் தொழிலதிபர் எவ்வித முன் அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக இந்த சிறப்புமிக்க குருத்வாராவை இடித்துள்ளார் என பரூகாபாத் விளக்கம் அளித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வா தனது அறிக்கையில்,
"சீக்கியர்களின் புனிதமான மத வழிபாட்டுத் தலம் இடிக்கப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நாசவேலையாகும்.
வரலாற்றுப் பழமை வாய்ந்த ஒரு குருத்வாரா இடிக்கப்படும் போது, அங்குள்ள நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது பெரும் கவலையளிக்கிறது.
இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் அரசு உடனடியாக நேர்மையான மற்றும் விரைவான விசாரணையை நடத்த வேண்டும். குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குருத்வாராவை மீண்டும் அதே இடத்தில் உடனடியாகப் புனரமைத்துக் கட்டியெழுப்ப வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
சீக்கிய சமூகத்தினரின் போராட்டம் மாகாணம் முழுவதும் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பஞ்சாப் மாநில முதலமைச்சர் மரியம் நவாஸ், இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இடிக்கப்பட்ட குருத்வாராவை மீண்டும் அரசாங்கச் செலவிலேயே புனரமைத்துத் தர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றத்தைத் தணிக்கக் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.