ஹபீஸ் சயீத் 
உலகம்

அவரை ஒன்னும் சொல்லாதீங்க.. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு எதிராக என்ஐஏ பிடிவாரண்ட் - பொங்கிய பாகிஸ்தான்

இந்தியாவின் தொடர்ச்சியான அரசியல் உத்தியின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீதுக்கு ஆதரவாகப் பாகிஸ்தான் அரசு களமிறங்கியுள்ளது.

பஹல்காம் தாக்குதல் - பிடிவாரண்ட்

கடந்த ஆண்டு காஷ்மீரின் பஹ்லகாமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக ஹபீஸ் சயீதுக்கு எதிராக இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் அடிப்படையில் ஹபீஸ் சயீதை தேடப்படும் குற்றவாளி என அறிவித்த என்ஐஏ நீதிமன்றம், அவனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.

ஹபீஸ் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிலையில் அவனுக்கு எதிரான நடவடிக்கைக்கு சர்வதேச அரங்கை நாட இந்தியா திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் சப்போர்ட்

இந்தியாவின் சட்ட நடவடிக்கையை தொடர்ந்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு இந்தியாவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்திராபி நடத்திய செய்தியாளர் சந்திப்பில்,

"இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்துள்ள இந்தக் குற்றப்பத்திரிகை முற்றிலும் போலியானது.

காஷ்மீரின் அரசியல் தலைமைகளைக் குறிவைப்பதற்காக, போலி சட்ட நடைமுறைகளைப் பயன்படுத்தும் இந்தியாவின் தொடர்ச்சியான அரசியல் உத்தியின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் புகார்களை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தான், தற்போது மீண்டும் ஒரு சர்வதேசபயங்கரவாதியை பாதுகாக்க தூதரக ரீதியாக முன்வந்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.