உலகம்

நைஜீரியா கனமழை: வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 151 ஆக உயர்வு

கனமழையால் மோக்வா நகர் தத்தளித்த நிலையில் அணை உடைந்து நீர் புகுந்தது. ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்தனர்.

மாலை மலர்

அபுஜா:

நைஜீரியா நாட்டின் மார்க்கெட் நகரான மோக்வா, மழை வெள்ளத்தில் மூழ்கியது. இதில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மோக்வா நகருக்கு அருகில் உள்ள அணை உடைந்ததால் நகருக்குள் வெள்ளம் புகுந்து நிலைமையை மேலும் மோசமாக்கியது. பல மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் மோக்வா நகர் வெள்ளத்தில் தத்தளித்த நேரத்தில், அணை உடைந்து தண்ணீர் நகருக்குள் புகுந்ததால் உயிரிழப்பு அதிகமானது.

பல வீடுகள் நீரில் மூழ்கின. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கனமழை காரணமாக ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், நைஜீரியாவில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 151 பேர் உயிரிழந்தனர் என நைஜர் அவசரகால அமைப்பின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். மேலும் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.