உலகம்

நேபாளத்தில் பெருவெள்ளத்துக்கு காலநிலை மாற்றமே காரணம்- பிரதமர் பலேந்திர ஷா

நேபாளம் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1,127-ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஆயிரக் கணக்கானோர் அடித்து செல்லப்பட்டனர். பேரழிவு உண்டான பகுதிகளில் இன்று 8-வது நாளாக மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. சேறு-சகதிகளில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1,127-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சித்வான் மாவட்டத்தில் 348 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

586 வெளிநாட்டினர் உள்பட 4800-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருக்கிறார்கள். நேபாள வெள்ளத்தில் சிக்கி ஏராளமான இந்தியர்களும் மாயமாகி இருக்கிறார்கள்.

இதுவரை மீட்கப்பட்ட உடல்களில் 95 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்படாத 911 உடல்கள் குறித்த விவரங்கள் நேபாளக் காவல் துறையின் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

புதைக்கப்படும் உடல்கள்

இதற்கிடையே வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டு வருகின்றன. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள கோகர்ணா காட்டுப் பகுதியிலும், சித்வானில் உள்ள தேவ்காட் பகுதியிலும் பெரிய குழிகள் தோண்டப்பட்டு உடல்களை வரிசையாக வைத்து புதைத்தனர்.

புதைக்கப்பட்ட உடல்களில் டி.என்.ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களின் அடையாளத்தை கண்டறிந்த பிறகு, புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து உடல்களை எடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு காலநிலை மாற்றமே காரணம் என்று அந்நாட்டு பிரதமர் பலேந்திர ஷா தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது:-

நேபாளத்தில் ஏற்பட்ட இந்த பேரழிவுக்கு காலநிலை மாற்றமே காரணம் என்பதில் சந்தேகமில்லை. இமயமலை வெப்பநிலையில் 1.8 டிகிரி செல்சியஸ் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.

ஒரு பெரிய பனியாறு அல்லது பாறை-பனிச்சரிவு போதேகோஷி ஆற்றில் வெள்ளப் பெருக்கைத் தூண்டியது என்றும், உருகும் பனியும் செங்குத்தான நிலப்பரப்பும் வெள்ளத்தை கீழ்நோக்கி பாய செய்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

இமயமலைப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தின் விளைவாக நாம் எதிர்கொள்ள வேண்டிய அபாயம் அதிகரித்து வருவதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.

இதற்கு வலுவான உலகளாவிய பேரிடர் ஒத்துழைப்பு அவசியமாகும். அடையாளம் காண முடியாத நிலையில் கண்டெ டுக்கப்பட்ட சடலங்களை மட்டுமே அரசாங்கம் கை யாண்டு வருகிறது.

அவற்றை அடையாளம் காண உத வக்கூடிய டி.என்.ஏ மாதிரி கள் மற்றும் பிற ஆதா ரங்களையும் பாதுகாத்து வருகிறது. அடையாளம் காணப் பட்ட சடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்ப டைக்கப்பட்டு வருகின்றன என்றார்.