உலகம்

உக்ரைன் போரில் 20 லட்சத்தை கடந்த இழப்புகள் - ஆய்வு நிறுவனம் பகீர் தகவல்!

4 லட்சம் முதல் 4.5 லட்சம் வரையிலான ரஷ்யர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் சிந்தனைக் குழு (think tank) ஒன்று வெளியிட்ட ஆய்வின்படி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் 20 லட்சத்திற்கும் அதிகமான ராணுவத்தினர் உயிரிழப்பு அல்லது காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதில் ரஷ்ய படைகளே அதிக இழப்புகளை சந்தித்துள்ளன.

"ரஷ்ய மற்றும் உக்ரேனிய தரப்பில் ஏற்பட்ட மொத்த இழப்புகள் (உயிரிழப்பு மற்றும் காயங்கள்) 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது," என்று 'மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம்' (CSIS) தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 2022-இல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது முதல், ரஷ்யப் படைகளில் மொத்தம் 14 லட்சம் பேர் (உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள்) பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 4 லட்சம் முதல் 4.5 லட்சம் வரையிலான ரஷ்யர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

அதே காலகட்டத்தில், உக்ரேனிய படைகளில் 5.25 லட்சம் முதல் 6.25 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் CSIS கூறியுள்ளது.

"இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா பங்கேற்ற அனைத்து போர்களிலும் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளை விட, உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் நான்கு மடங்குக்கும் அதிகமாகும்" என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.