உலகம்

செஷல்ஸ் நவசக்தி விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு!

இந்திய வம்சாவளியினர் தேசியக் கொடியை அசைத்து, உற்சாக முழக்கங்களுடன் பிரதமரை வரவேற்றனர்.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக செஷல்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் இறுதி நாளான இன்று, அந்நாட்டின் தலைநகரான விக்டோரியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயத்திற்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். உலக அமைதி மற்றும் செழுமைக்காக அவர் இக்கோவிலில் பிரார்த்தனை மேற்கொண்டார்.

செஷல்ஸ் நாட்டின் ஒரே இந்து கோவிலான இது, முற்றிலும் தென்னிந்திய கட்டிடக்கலை மற்றும் பாரம்பரிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இங்கு வழிபாடு நடத்திய பிரதமர் மோடிக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவில் வழிபாட்டைத் தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த ஏராளமான இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து உரையாடினார். அப்போது அவர்கள் தேசியக் கொடியை அசைத்து, உற்சாக முழக்கங்களுடன் பிரதமரை வரவேற்றனர்.

செஷல்ஸ் நாட்டின் வளர்ச்சிக்கு இந்திய வம்சாவளியினர் ஆற்றி வரும் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான கலாச்சார மற்றும் வரலாற்று உறவுகளை தனது பேச்சில் சுட்டிக்காட்டினார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் 'மகாசாகர்' கோட்பாட்டின் கீழ், இரு நாடுகளின் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பிரதமரின் இந்த வரலாற்றுப் பயணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.