நார்வே, ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்து நாட்டுச் சுற்றுப்பயணத்தின் ஐந்தாவது மற்றும் இறுதிப் பகுதிக்காக இத்தாலி வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் இத்தாலிய துணைப் பிரதமர் அன்டோனியோ தஜானி பிரதமர் மோடியை வரவேற்றார். மேலும் இந்தியப் புலம்பெயர் சமூகத்தினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து இத்தாலிய குடியரசுத் தலைவர் செர்ஜியோ மட்டரெல்லா மற்றும் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோரின் வரவேற்பை பெற்றார்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தலைமையகத்திற்கு சென்று அங்கே பலதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றின் மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 'கூட்டு உத்திசார் செயல் திட்டம் 2025-2029'-ஐ இரு தரப்பினரும் தீவிரமாக முன்னெடுத்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
கொலோசியம் அரங்கிலிருந்தபடி பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மெலோனி தனது 'X' பதிவில், "ரோமிற்கு நல்வரவு, எனது நண்பரே," என நெகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.