வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவும் தென் கொரியாவும் தங்களது கூட்டு அணு ஆயுதத் திறனைத் தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்புச் சூழலை ஆபத்தானதாக மாற்றியுள்ளன. வடகொரியாவைத் தாக்குவதே இதன் ஒரே நோக்கம் ஆகும்.
கணிக்க முடியாத மற்றும் சிக்கலான உலகளாவிய பாதுகாப்புச் சூழலை எதிர்கொள்ள அணு ஆயுத நாடாக வட கொரியா தனது நிலையைச் செயல்படுத்துவதே ஒரே வழி ஆகும்.
அணு ஆயுதப் படைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வலுப்படுத்துவதுதான் பாதுகாப்பற்ற சூழலை துணிச்சலுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்வதற்கான மிகச் சரியான மற்றும் தனித்துவமான வழியாகும்.
ஆதிக்க சக்திகளின் கொள்ளையர் போன்ற பேராசையால் கற்பனை செய்யமுடியாத, வியக்கத்தக்க சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் உலகம் முழுவதும் மோதல்கள் மிகவும் வன்முறைத் தன்மை கொண்டதாக மாறுகிறது.
ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் ரத்தம் சிந்துதல் அதிகரிப்பதற்கு அமெரிக்காவே காரணம். போர்களை அமெரிக்கா தூண்டிவிட்டு வருகிறது என தெரிவித்தார்.