ஈரான் போர் ஒருபுறம் ஓய்ந்தாலும் லெபனான் மற்றும் காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. நேற்று தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இரண்டு சிறுமிகள், பத்திரிகையாளர் உட்பட 6 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை சுமார் 2:00 மணியளவில் காசா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியின் போது 6 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. 4 மற்றும் 14 வயதுடைய அக்கா-தங்கை இதில் அடங்குவர்
இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கொல்லப்பட்டவர்களில் சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின் கேமராமேனும் ஒருவர் ஆவார்.
அவர் ஒரு 'ஹமாஸ் பயங்கரவாதி' என்றும், அதனால்தான் அவர் குறிவைக்கப்பட்டார் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது செயலை நியாயப்படுத்தியுள்ளது.
ஆனால், இஸ்ரேலின் இந்த வாதத்தை அல் ஜசீரா நிறுவனமும், அவரது குடும்பத்தினரும் மறுத்துள்ளனர். திட்டமிட்டு ஊடகவியலாளர்களை கொன்றுவிட்டு, அவர்கள் மீது இஸ்ரேல் பழி பிடுவதாக சர்வதேச ஊடக அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.