ஈரானில் அணுமின் நிலையம் அருகே அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புரிந்துணர்வு சீர்குலைந்த நிலையில் மூன்றாவது நாளாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் நடந்து வருகிறது.
நேற்று தெற்கு ஈரானின் பந்தர் அபபாஸ், சபாஹர் உள்ளிட்ட துறைமுக நகரங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது.
பதிலுக்கு பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது குறிவைத்து தாக்கியதாக ஈரான் தெரிவித்தது. தங்கள் நாட்டை நோக்கி வந்த டிரோன், ஏவுகணைகளை இடைமறித்து அளித்ததாக குவைத், பஹ்ரைன் நாடுகளும் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த சூழலில் ஈரானின் மிக முக்கிய புஷெஹர் அணுமின் நிலையத்தின் மிக அருகாமையில் அமெரிக்கப் படைகள் குண்டுவீசியுள்ளன.
ஈரான் அரசு ஊடகங்களின்படி, இந்த தாக்குதலின் தாக்கத்தால், புஷெஹர் அணுமின் நிலைய வளாகத்திற்குள் இருக்கும் ஒரு கட்டிடம் பகுதியளவு பலத்த சேதமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கதிர்வீச்சு அபாயம் குறித்த தகவல் வெளியாகவில்லை. அணுமின் நிலையம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அணுமின் நிலையம் தவிர, ஈரானின் முக்கிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் துறைமுக நகரங்களான பந்தர் அப்பாஸ் மற்றும் கொனார ஆகிய கடலோரப் பகுதிகளும் அமெரிக்காவின் தொடர் குண்டுவீச்சுகளுக்கு உள்ளாகி வருகின்றன.
ஹார்முஸ் ஜலசந்தி வழியே செல்லக்கூடிய சர்வதேச வணிகக் கப்பல்களை ஈரான் ராணுவம் தொடர்ந்து தாக்குவதாக குற்றம் சாட்டி அமெரிக்கா இந்தத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஒப்பந்த முறிவுக்குப் பிந்தைய கடந்த 48 மணி நேரத்தில் மட்டும், ஈரானின் கடலோரப் பகுதிகளில் உள்ள சுமார் 170க்கும் மேற்பட்ட இலக்குகளை அமெரிக்கப் படைகள் தாக்கியுள்ளன.
கடந்த 2 நாட்களில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் தங்கள் நாட்டில் 14 பேர் உயிரிழந்ததாக ஈரான் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.