

கடந்த 4 நான்கு மாதங்களாக அமெரிக்கா - ஈரான் இடையே நீடித்த போர், கடந்த வாரம் ஏற்பட்ட புரிந்துணர்வு மூலம் தற்காலிக முடிவுக்கு வந்தது.
ஆனால் உடன்பாட்டை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான், வணிக கப்பல்களை தாக்கியதால், ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்கா, முழுவீச்சில் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
இதனால் மத்திய கிழக்கு முழுவதும் மீண்டும் பதற்றம் தொற்றியுள்ளது.
தெற்கு ஈரானில் முதன்மைத் துறைமுக நகரங்களான பந்தர் அப்பாஸ், சாபஹார், ஜாஸ்க் மற்றும் எல்லைப் பகுதியான அபு மூசா தீவு ஆகிய இடங்களில் உள்ள ராணுவ இலக்குகளை அமெரிக்கா குறிவைத்து தாக்கியுள்ளது.
அமெரிக்காவின் தொடர் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் புரட்சிகர காவல்படை, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, அதன் கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து இந்தத் கூட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
குவைத்தில் உள்ள அரிப்ஜான் மற்றும் அலி அல் சலேம் விமானப்படைத் தளங்கள், மற்றும் பஹ்ரைனில் உள்ள ஜுபைர் மற்றும் ஷேக் ஈசா ஆகிய அமெரிக்க ராணுவக் கட்டுப்பாட்டு மையங்கள் இந்தத் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டன.
பஹ்ரைன் மற்றும் கத்தார் நாடுகளில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைக் சைரன்கள் ஒலிக்கவிடப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியுள்ளதாகக் குவைத் அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தனது தாக்குதல்களை நிறுத்தவில்லை எனில், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள பிற அமெரிக்கத் தளங்களும் தரைமட்டமாக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மறுபுறம், ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே தாங்கள் செயல்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக அமெரிக்கப் படை, ஈரானின் மிக முக்கியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களைக் குறிவைத்துத் தங்களது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை குற்றவாளி மற்றும் கொலைகாரன் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் சாடியுள்ளது.
அமெரிக்கா ஒருதலைப்பட்சமாகத் தாக்குதல் நடத்தி அமைதி ஒப்பந்தத்தை மீறியுள்ளதால், தங்களது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க ஈரான் எத்தகைய எல்லைக்கும் செல்லும் எனத் தெரிவித்துள்ளது.