இந்தியா மற்றும் சீனாவின் அசாத்திய வளர்ச்சி என்பது அந்தந்த நாடுகளின் கடின உழைப்பால் வந்ததே தவிர, மற்றவர்களின் தயவால் இல்லை எனக் கூறி அமெரிக்காவை இந்தியாவிற்கான சீன தூதர் சூ ஃபெய்ஹோங் கண்டித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்தியாவிற்கான சீன தூதர் சூ ஃபெய்ஹோங், கடந்த சில தசாப்தங்களில் இந்தியா மற்றும் சீனா இரண்டும் “மிகச் சிறப்பான வளர்ச்சி” அடைந்துள்ளன. இந்த முன்னேற்றம் பிற நாடுகளின் உதவியால் இல்லை, மாறாக, தங்களது மக்களின் உழைப்பும் அறிவும் காரணம் என்று அவர் வலியுறுத்தினார்.
சீனாவின் வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவியது தவறு என்றும், அந்தத் தவறை இந்தியா விஷயத்தில் செய்ய மாட்டோம் என்றும் அமெரிக்கத் துணை வெளியுறவு அமைச்சர் கிரிஸ்டோபர் பேசியதற்கு சீனத் தூதர் ஷு பெய்ஹாங் பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இந்தியா மற்றும் சீனா நல்ல அண்டை நாடுகளாக , ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து முன்னேற வேண்டும் என்றும் இரு நாடுகளும் உலகின் முக்கிய வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் என்பதால், பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரித்து, நமது நலன்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.