மனிதர்களின் சிரிப்பும், கொரில்லா, சிம்பன்சி, ஒராங்குட்டான் போன்ற மனிதக் குரங்குகள் மற்றும் பெரும் குரங்குகளின் சிரிப்பு ஒரேமாதிரியான தாளத்தை கொண்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
பல விலங்குகள் சிரித்தாலும், குரங்குகளே மனித சிரிப்பின் தாளத்தைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மனிதப் பேச்சு எங்கிருந்து தோன்றியது, மனிதன் எப்போது பேசத் தொடங்கினான் என்பதை தெரிந்துகொள்ள இந்தக் கண்டுபிடிப்பு உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
13 வெவ்வேறு பெரும் குரங்குகள் மென்மையாகக் கூச்சலிட்டதை பதிவுசெய்து, அந்த ஒலியை நான்கு சிறுகுழந்தைகள் விளையாடும்போது சிரித்த ஒலியோடு ஒப்பிட்டுள்ளனர்.
அப்போது இந்த சிரிப்பலைகள் ஒத்த தாளத்தைக் கொண்டிருப்பதையும், ஒவ்வொரு சிரிப்பிற்கும் இடையில் சீரான இடைவெளிகள் இருப்பதையும் வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளனர்.
இருப்பினும் இந்த இருவகை சிரிப்புகளுக்கும் இடையே சில வேறுபாடுகளையும் கண்டறிந்துள்ளனர். மனிதர்களின் சிரிப்பு சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். ஆனால் குரங்குகள் பெரும்பாலும் விளையாடும்போது, அவற்றை தொடும்போது (கிச்சு கிச்சு மூட்டும்போது) சிரிக்கின்றன.
சிரிப்பு பயன்படுத்தப்படும் விதத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், மனிதப் பேச்சு போன்ற தகவல் தொடர்புகளின் வளர்ச்சியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.