காசாவை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக நிர்வகித்து வந்த பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ் தங்கள் அரசை கலைப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் முற்றுகையிடப்பட்ட பகுதியில் பொது நிர்வாகத்தை செயல்படுத்த ஒரு தொழில்நுட்ப நிபுணர்கள் குழு அமைப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நேற்று (திங்கள் கிழமை) மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை ஹமாஸ் அமைப்பின் குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றத்தைக் குறிக்கிறது. முந்தைய ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 2007-இல் போட்டியாளரான ஃபதா (Fatah) அமைப்பிடம் இருந்து கட்டுப்பாட்டை கைப்பற்றியதில் இருந்து ஹமாஸ் காசாவை நிர்வகித்து வந்தது.
போர்நிறுத்தம்:
கடந்த அக்டோபர் மாதம் காசாவில் இஸ்ரேலுடனான அமெரிக்க மத்தியஸ்தத்திலான "போர்நிறுத்தம்" நடைமுறைக்கு வந்ததில் இருந்து, அன்றாட நிர்வாக பொறுப்புகளில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பு பலமுறை கூறியுள்ளது. இருப்பினும், அதன் ஆயுதங்களை களைவது தொடர்பான கேள்வி இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது.
"ஒப்புக்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளை செயல்படுத்துதல், நிர்வாக மாற்ற செயல்முறையை எளிதாக்குதல் மற்றும் இந்த நடவடிக்கைகளின் தீவிரத்தை வெளிப்படுத்துதல் ஆகியவற்றின் ஒரு பகுதியாக, அரசாங்கத்தின் அவசரநிலைக் குழுவின் தலைவர் முகமது அல்-ஃபர்ரா தனது பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகவும், அந்த குழுவை கலைக்கவும் முடிவு செய்துள்ளார்" என்று காசாவின் அரசு ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் முடிவு:
பாலஸ்தீன பகுதி மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை போன்ற போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமெரிக்க ஆதரவு திட்டத்தின் கீழ், காசாவின் எதிர்கால நிர்வாகத்தை கண்காணிக்கும் பொறுப்பை கொண்ட 'காசா நிர்வாகத்திற்கான தேசியக் குழு' (NCAG) விரைவாக செயல்பட தொடங்க வேண்டும் என்று ஹமாஸ் விரும்புவதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"ஆக்கிரமிப்பு மற்றும் அழித்தொழிப்பு போரை் தொடர்ந்து நடத்தி வரும் தரப்பினருக்கு, ஆக்கிரமிப்பை தொடர்வதற்கான எந்தவொரு சாக்குப்போக்கையும் அளிக்காத வகையில், இனி காசா பகுதியின் நிர்வாக பொறுப்பில் இருக்கப்போவதில்லை என்ற புதிய நடவடிக்கையை ஹமாஸ் எடுத்துள்ளது," என்று ஹமாஸ் செய்தி தொடர்பாளர் ஹசெம் காசெம் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் கூறினார்.