உலகம்

கடல் கடந்த தமிழ் நாகரிகம்: தாய்லாந்தில் அரிய வகை தங்க மோதிரம் கண்டுபிடிப்பு!

"இந்த மோதிரம் பண்டைய இந்தியாவின் வணிகர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெரும் வணிகருடையதாக இருக்கலாம்"

தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் நடைபெற்ற அகழாய்வில், 2,000 ஆண்டுகள் பழமையான ‘தமிழி’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய தங்க முத்திரை மோதிரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது கி.பி. இராஜேந்திர சோழனின் கடற்படைப் படையெடுப்புகளுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தமிழர்கள் மிக நெருங்கிய வணிக மற்றும் கலாச்சாரத் தொடர்பைக் கொண்டிருந்தனர் என்பதற்கான உறுதியான வரலாற்றுச் சான்றாக உருவெடுத்துள்ளது.

தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கிற்கு தென்மேற்கே சுமார் 130 கி.மீ தொலைவில் உள்ள 'டான் யாய் தாங்' என்ற கிராமத்தில் உள்ள நெல் வயல் ஒன்றில், உள்ளூர் மக்கள் சில மாதங்களுக்கு முன்பு பழமையான வெண்கல முரசுகளின் துண்டுகளைக் கண்டெடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, தாய்லாந்து அரசின் தொல்லியல் துறையான 'Fine Arts Department' கடந்த பிப்ரவரி மாதம் முதல் அங்கு தீவிர அகழாய்வை மேற்கொண்டு வருகிறது.

மோதிரத்தின் சிறப்பு-இரும்புக்கால நாகரிகம்:

இந்த அகழாய்வு தளம் வரலாற்றுக்கு முந்தைய இரும்புக்காலத்தைச் (Iron Age - சுமார் 1,500 முதல் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது) சேர்ந்தது எனத் கணிக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 8 மனித எலும்புக்கூடுகள், தங்க-வெண்கல ஆபரணங்கள் மற்றும் மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதிர்ஷ்ட மோதிரம்:

அங்குள்ள 4-ஆம் எண் எலும்புக்கூட்டின் அருகில் இரண்டு தங்க மோதிரங்கள் கிடைத்தன. அதில் ஒன்று சாதாரண தங்க வளையம், மற்றொன்றில் பழங்கால இந்திய எழுத்து வடிவமான பிராமி (தமிழி) எழுத்துக்கள் தலைகீழாக செதுக்கப்பட்டிருந்தன.

எழுத்தின் பொருள்:

இந்த எழுத்துக்களை சிங்கப்பூர் 'சார்' குழுவின் கல்வெட்டு ஆய்வாளர் ரஞ்சித் குமார் மற்றும் தாய்லாந்து தொல்லியலாளர்கள் ஆய்வு செய்ததில், அது ‘புசரகிதாஸ’ எனப் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். இதற்கு "பூச நட்சத்திரத்தால் பாதுகாக்கப்பட்டவர்" என்று பொருளாகும்.

அளரி வைரதன்:

தமிழறிஞர்களின் கூற்றுப்படி, இந்த மோதிரத்தை மெழுகிலோ அல்லது களிமண்ணிலோ அச்சடிப்பதற்காகத் தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ள அந்தத் தமிழ்ப் பெயர் ‘அளரி வைரதன்’என்பதைக் குறிக்கிறது. 'அளரி' என்பது வளமான மருத நிலத்தைக் குறிக்கும் தூய தமிழ்ச் சொல் என்று தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம்:

தாய்லாந்து தொல்லியல் துறையின் முதற்கட்ட கணிக்கின்படி, இந்த மோதிரம் பண்டைய இந்தியாவின் வணிகர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெரும் வணிகருடையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஏற்கனவே தாய்லாந்தின் கிராபி மற்றும் சூம்போன் ஆகிய கடலோரப் பகுதிகளில் இது போன்ற தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகளும், சீல்களும் கிடைத்துள்ள நிலையில், இந்த புதிய தங்க மோதிரக் கண்டுபிடிப்பு பண்டைய கடல்வழி வணிகப் பாதையில் தமிழர்களின் ஆதிக்கத்தை மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளது.

தற்போது கண்டெடுக்கப்பட்ட ஆபரணங்கள் அனைத்தும் தாய்லாந்து ராட்சபுரி மாகாணத்தில் உள்ள 'ப்ரா நகோன் கிரி' தேசிய அருங்காட்சியகத்திற்குப் பாதுகாப்பு மற்றும் கூடுதல் ஆய்வுகளுக்காக மாற்றப்பட்டுள்ளன.