US temporarily blocks entry of recent travelers including green card holders. 
உலகம்

எபோலா அச்சம்: கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் நுழைவதற்கு அமெரிக்கா தற்காலிக தடை

காங்கோ, உகாண்டா அல்லது தெற்கு சூடான் வழியாகப் பயணம் செய்த சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பாளர்களுக்கு அமெரிக்கா தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.

எபோலா வைரஸ் நோய் (EVD) என்பது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு கொடிய தொற்றுநோயாகும்.

இந்த நோய் ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக காங்கோ, உகாண்டா போன்ற நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. உயிரிழப்பு அதிகரித்து வருகின்றன. இதனால் உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக கடந்த 21 நாட்களுக்குள் காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா அல்லது தெற்கு சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று திரும்பும் அமெரிக்காவின் சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பாளர்களான கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு அமெரிக்க அரசு தற்காலிகத் தடைவிதித்துள்ளது.

முன்னதாக அமெரிக்கக் குடிமக்கள், நாட்டினர் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 30 நாள் எபோலா தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

கிரீன் கார்டுக்கு தடை

இந்நிலையில் எபோலா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க, கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இந்தத் தடையை நீட்டிப்பது அவசியம் என்று அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் (CDC) தெரிவித்துள்ளது.

பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் அவசரக்காலப் பதிலளிப்பு வளங்களை நிர்வகிப்பதற்கும் இடையே ஒரு சமநிலையை இந்த நடவடிக்கை ஏற்படுத்தும், என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க பொது சுகாதாரச் சட்டத்தின் பிரிவு 42-இன் கீழ், சிடிசி (CDC) தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்காக மே 18 அன்று புலம்பெயர்ந்தோர் நாட்டிற்குள் நுழைவதைத் தடைசெய்ய கூட்டாட்சி சுகாதார அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் இந்த உத்தரவை முதன்முதலில் பிறப்பித்தது.

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

அரிதான புண்டிபுக்யோ வகை எபோலா, ஒரு தேசிய நோய்ப் பரவலாக மாறுவதற்கான அபாயத்தை நெருங்குகிறது என்று உலக சுகாதார அமைaப்பு நேற்று எச்சரித்துள்ளது. மேலும் இந்நோய்ப் பரவலை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அவசர நிலையாகவும் அறிவித்துள்ளது.