நியூயார்க் நகரில் உள்ள 1,454 அடி உயர எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் பாதுகாப்பு கயிறுகள் எதுவும் இன்றி ஏறிய காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடம் 1,454 அடி உயரம் கொண்டது. இந்த கட்டிடத்தின் உச்சிக்கு ரஷியாவைச் சேர்ந்த அஞ்சேலா மற்றும் இவான் ஆகிய காதல் ஜோடி பாதுகாப்பு கயிறுகள் எதுவும் இன்றி ஆபத்தான முறையில் ஏறினர்.
அங்கு காற்றில் பறந்தபடி உலக அமைதி மற்றும் காதலின் சக்தி குறித்த பதாகை ஒன்றை அவர்கள் விரித்தனர். பின்னர், அந்த அந்தரத்து உச்சியில் வாலிபர் இவான் முழங்காலிட்டு, தன் காதலியிடம் திருமண விருப்பத்தை கூறி மோதிரம் அணிவித்தார். இதனைப் பார்த்து கீழே நின்ற பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த நியூயார்க் போலீசார், கட்டிடத்தின் உச்சிக்குச் சென்று அந்த சாகச காதல் ஜோடியை பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்தல் மற்றும் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்த குற்றங்களுக்காக இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.