உலகம்

மக்கள் போராட்டம் எதிரொலி: பொலிவியாவில் அவசரநிலை பிரகடனம்

போராட்டக்காரர்களிடம் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவி வருகிறது.

அரசுக்கு எதிராக பொதுமக்கள் இணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டக்காரர்கள் நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளை முழுமையாக முடக்கியதால் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஏற்றி வந்த லாரிகள் ஆங்காங்கே ஸ்தம்பித்து நின்றன. இதனால் ஒட்டுமொத்த நாடும் கடும் தட்டுப்பாட்டால் நிலைகுலைந்தது.

இதற்கிடையே, போராட்டக்காரர்களிடம் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இந்நிலையில், பொலிவியா அதிபர் ரோட்ரிகோ பாஸ், நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அவசர நிலையைப் பிரகடனம் செய்வதாக அறிவித்துள்ளார். இந்த அவசர நிலை அடுத்த 90 நாள்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த எமர்ஜென்சி சாலை மறியல்களை அகற்றி நாட்டின் ஒழுங்கை மீட்டெடுக்க ராணுவத்திற்கு முழு அதிகாரத்தை வழங்குகிறது. வன்முறையில் ஈடுபடுவோர்மீது கடும் சட்ட நடவடிக்கை பாயும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பொலிவியாவில் பரபரப்பு சூழல் நிலவுகிறது.