வங்கதேசத்தின் பருவமழை தீவிரமடைந்த்துள்ள சூழலில் நாட்டின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 5 குழந்தைகள் உட்பட 8 ரோஹிங்கியா அகதிகள் உயிரிழந்தனர்.
காக்ஸ் பசார் மாவட்டத்தில் பல மண் மேடுகள் கடந்த ஞாயிறு இரவு முதல் சரியத் தொடங்கி இந்த நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் மேடுகளில் இருந்த வீடுகளும் நிலைகுலைந்து சரிந்தன.
மண்சரிவுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. அங்கு சுமார் 4 இடங்களில் இவ்வாறான நிலச்சரிவுகள் பதிவாகி உள்ளது.
இவை ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் இருக்கும் இடங்களில் நிகழ்ந்த்துள்ளன.
இதுவரை 8 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், அதில் ஐவர் குழந்தைகள் என்றும் தீயணைப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரி டோலார் திரிபுரா என்பவர் அசோஷியேட் பிரஸ் செய்திக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். மேலும் 2 குழந்தைகள் காயங்களுடன் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
உயிரிழந்த 8 பேரும் ரோஹிங்கியா அகதிகள் என தெரியவந்துள்ளது. அவர்களின் உடல்கள் உள்ளூர் அகதிகள் குழு தலைவர்கள் மற்றும் காவல்துறையினர் மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
வரும் நாட்களில் மழை மேலும் அதிகரிக்கும் என டாக்காவில் உள்ள வானிலை மையம் எச்சரித்துள்ளது.
எனவே நிலச்சரிவு அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் இருக்கும் அகதிகளில் சுமார் 1000 பேர் இதுவரை இட பெயர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐநா அகதிகள் ஆணையத்தின் தரவுகள் படி, வங்கதேசத்தில் கடந்த 2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 36 அகதிகள் உயிரிழந்ததாகவும், 86 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் இருந்து தப்பி வந்த 10 லட்சதிற்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர்.
அவர்களின் வாழ்க்கை சூழல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போதிய உணவு, மருத்துவம் மற்றும் தங்குமிட வசதிகள் இன்றி அவர்கள் தவித்து வருகின்றனர்.