ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் நேரடி தாக்குதல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க ராணுவம் சாதனை அளவாக ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை 40 வணிக கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க உதவியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிகாரிகள் கூற்றுப்படி கடந்த செய்வ்வாய்கிழமை ஈரானின் தாக்குதல்களில் இருந்து தப்பித்து ஹார்முஸ் ஜலசந்தியை இக்கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க அமெரிக்க ராணுவம் உதவியுள்ளது. அந்த கப்பல்களில் மொத்தம் 18 மில்லியன் பேரல் எண்ணெய் இருந்துள்ளது.
ஈரானின் ஏவுகணைகளை தடுத்து கப்பல்கள் செல்ல உதவிய அதேநேரம், அமெரிக்க படைகள் அந்நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றியுள்ள 60 ஈரான் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கியுள்ளது.
இதற்காக அமெரிக்க வான்படை, கடற்படை உள்ளிட்டவை ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளன. மேலும் தன்வசம் உள்ள விண்வெளி செயற்கைகோள் தரவுகளையும் அமெரிக்க ராணுவம் இதற்கு பயன்படுத்தியுள்ளது.
மேலும் ஈரான் துறைமுகங்களின் செயல்பாடுகளை தடுக்கும் விதமாக அமெரிக்க ராணுவம் கடல் முற்றுகையிலும் ஈடுபட்டுள்ளது.
போர் தொடங்குவதற்கு முன்னர் ஹார்முஸ் வழியே தினமும் 20 மில்லியன் பேரல் எண்ணெய் ஏற்றுமதியாகும். ஆனால் இப்போது அந்த வரத்து குறைந்து எண்ணெய் ஏற்றுமதி குதிரைக்கொம்பாக மாறியுள்ளது. எனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன.
அமெரிக்காவின் செயல்களுக்கு பதிலடியாக அதன் ஆதரவு வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் முன்னெடுத்துள்ளது. நேற்று ஈரான் வான்பரப்பில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை தங்கள் ஏவுகணை அமைப்பு தடுத்து அழித்ததாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள ஈரான் நிலைகளில் வரும் நாட்களில் தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் ஹார்முஸ் ஜலசந்திக்கு சொந்தம் கொண்டாடும் விதமாக அதன் பெயரை மாற்றும் முடிவையும் டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.
ஹார்முஸில் பதற்றம் அதிகரிக்க முக்கிய காரணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி அமைந்துள்ள ஈரான் ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதே ஆகும்.
அங்கிருந்து ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டதாக கூறி அமெரிக்கா அந்த ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
அதைத்தொடர்ந்தே ஹார்முஸ் வழியே செல்லும் அமெரிக்க ஆதரவு நாடுகளின் வணிக கப்பல்களை ஈரான் தாக்க முற்பட்டது.
அதிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 40 வணிக கப்பல்களை அமெரிக்கா பாதுகாத்துள்ளது தற்போது தெரியவந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் ஹார்முஸில் பதற்றம் மென்மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.