ஓபன்ஏஐ நிறுவனத்தில் இதன் நாகரிக ஆபத்துகள் குறித்து இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி நிறுவனங்களான ஆந்த்ரோபிக் மற்றும் ஓபன்ஏஐ ஆகிய இரண்டிலும் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றிய 27 வயதான முன்னணி ஆய்வாளர் ஜேக்கப் காக்சன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள விரிவான பதிவில், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் மனித உயிர்களுடன் பேராபத்தான சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் அனைத்தும் பொறுப்பற்ற முறையில், தங்களை தாங்களே மேம்படுத்திக் கொள்ளும் 'சூப்பர் இன்டலிஜென்ஸ்' அமைப்புகளை உருவாக்கும் போட்டியில் தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்த தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியை யாரும் குறைவாக மதிப்பிடக் கூடாது. மிக விரைவிலேயே மனித ஆற்றலை மிஞ்சும் வகையில் உருவாகும் இந்த அமைப்புகள், எதையும் ஹேக் செய்யவும், ஒரே இரவில் எந்தவொரு துறையிலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவும், நிஜ உலக வளங்களைக் கைப்பற்றக்கூடிய ஆற்றலையும் பெறும் திறன் கொண்டவை.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் இருக்கும் முக்கியத் தலைவர்களும் மூத்த ஆய்வாளர்களும், இந்த தொழில்நுட்பம் இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் மனித சமூகத்தையே அழித்துவிடும் என்று தனிப்பட்ட முறையில் நம்புகின்றனர். ஓபன்ஏஐ நிறுவனத்தில் இதன் நாகரிக ஆபத்துகள் குறித்து இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை.
அதேசமயம், ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் இதன் அபாயங்கள் தெரிந்திருந்தாலும், போட்டியில் தாங்கள் பின் தங்கிவிடக் கூடாது என்ற பயம் காரணமாகவே அவர்கள் தொடர்ந்து இதில் ஆபத்தான வேகத்தில் இயங்கி வருகின்றனர். முன்னதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்தைக் கடுமையாக விமர்சித்து வந்த தொழிலதிபர் எலான் மாஸ்க், அந்நிறுவனமே தற்போது செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணியில் இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
காக்சனின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் அலைன்மென்ட் சயின்ஸ் பிரிவின் தலைவர் ஈவான் ஹூபிங்கர், காக்சன் கூறிய கருத்து உண்மையானதுதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார். அடுத்த பத்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவால் மனித குலத்திற்கு ஆபத்து ஏற்பட 10 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், சூப்பர் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சரியான பாதுகாப்புத் திட்டங்கள் இன்னும் முழுமையாக உருவாக்கப்படவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.