இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள ஆரக்கிள் கிளைகளின் ஊழியர்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
உலகளவில் பிரபல மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், தனது ஊழியர்களை மீண்டும் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதிகாலை 6 மணியளவில் நிறுவனத்தின் மேலாண்மை பிரிவில் இருந்து ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்அஞ்சலில், "இன்றே உங்களுடைய கடைசி வேலை நாள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வந்த இந்த திடீர் அறிவிப்பால், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மின்அஞ்சல் அனுப்பப்பட்ட சில நிமிடங்களிலேயே அவர்களின் அலுவலக கணினி அணுகல் மற்றும் பிற சேவைகள் உடனடியாக முடக்கப்பட்டன.
நிறுவன அமைப்பில் கொண்டு வரப்படும் பெரிய மாற்றங்களின் ஒரு பகுதியாகவே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும், தரவு மையங்களை விரிவாக்கம் செய்வதற்கும் ஆரக்கிள் நிறுவனம் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறது. இதனால் அதிகரிக்கும் உட்கட்டமைப்பு செலவுகளை ஈடுகட்டவும், ஏஐ தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றியமைக்கவும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதாகக் கூறப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் மட்டும் ஆரக்கிள் நிறுவனம் ஏற்கெனவே சுமார் 21,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அடுத்தகட்ட ஆட்குறைப்பில் இறங்கியிருப்பது, உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள ஆராக்கிள் கிளைகளின் ஊழியர்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த புதிய சுற்றில் மொத்தம் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்பட உள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ விவரத்தை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.