கொல்கத்தா:
கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் பணியில் மருத்துவத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், உலக மருத்துவர்கள் தினம் நாளை (ஜூலை 1) கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், மருத்துவர்கள் தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவித்து மேற்குவங்காள அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில்,
’கொரோனா வைரசில் இருந்து மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர முன்கள வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜூலை 1 ஆம் தேதியை மாநில அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளோம்.
முன்கள வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மருத்துவர்கள் தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டும் என மத்திய அரசுக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன்’ என அவர் தெரிவித்தார்.