சென்னை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டதால் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
இதுதவிர மாங்காடு அருகே சிக்கராயபுரத்தில் உள்ள 23 கல்குவாரிகளில் இருந்தும் தண்ணீரை சுத்திகரித்து சென்னைக்கு வழங்குகிறார்கள். கடந்த 1 மாதமாக கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுவதால் இந்த கல்குவாரிகளில் தண்ணீர் குறைந்துவிட்டது. இம்மாதம் இறுதி வரைதான் அங்கிருந்து குடிநீர் எடுக்க முடியும்.
இதனால் மேலும் சில கல்குவாரிகளை கண்டறிந்து அங்கிருந்து தண்ணீர் எடுக்க குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதற்காக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:-
சென்னையின் குடிநீர் தேவைக்காக கூடுதலாக தாம்பரம் அருகே எருமையூரில் உள்ள கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக அந்த தண்ணீரை பரிசோதனை செய்துள்ளோம். தண்ணீரை உபயோகப்படுத்தலாம் என்று ஆய்வறிக்கை வந்துள்ளது.
எனவே விரைவில் தண்ணீரை சுத்திகரித்து சென்னை மக்களுக்கு வழங்குவோம். தலக்கனாஞ்சேரி என்ற இடத்தில் இருந்தும் வண்டலூர் அருகே நல்லாம் பாளையம் பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்தும் தண்ணீர் எடுக்க உள்ளோம். இதற்கான ஆய்வு பணிகள் விரைவில் முடிந்துவிடும் நிலையில் உள்ளது.
இதுதவிர திருவள்ளூர் மாவட்டத்தில் வேறு எங்கெங்கு தன்ணீர் எடுக்க முடியும் என்பது குறித்து மாவட்ட கலெக்டருடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நீர் ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே சென்னைக்கு நவம்பர் மாதம் வரை தொடர்ந்து தண்ணீர் கிடைக்கும் வகையில் நீர் ஆதாரங்கள் உள்ளன. அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை காலம் எம்பதால் அதன்பிறகு மழைநீர் தமிழகத்துக்கு கை கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.