செய்திகள்

விஜயகாந்த் உடல்நிலையை விமர்சிப்பவர்கள் எங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள்- விஜய பிரபாகரன் ஆவேச பேச்சு

விஜயகாந்துக்கு உடல் நலக்குறைவு என்று கூறுபவர்கள் ஏன் எங்கள் வீட்டுவாசலில் கூட்டணிக்காக நிற்கிறார்கள் என்று விஜய பிரபாகரன் பேசினார். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நேற்று மாலை தஞ்சை சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு இறகுப் பந்துப் போட்டியை தொடங்கி வைத்தார்.

பின்னர் கும்பகோணம் சென்ற விஜயபிரபாகரன் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

‘காவிரி டெல்டா பகுதியில் கடந்த காலங்களில் 58 சதவீத விவசாயம் நடைபெற்றது. தற்போது 7 சதவீதம் தான் விவசாயம் நடைபெறுகிறது. காவிரியில் தண்ணீர் வராததால் 51 சதவீதம் விவசாயம் செய்ய முடியாமல் போய் விட்டது.

வருங்காலத்தில் விஜயகாந்தின் ஆட்சி இல்லை என்றால் எதுவும் இல்லை. விஜயகாந்த் எப்போதும் சிங்கம் போல் தான் வருவார். ஆனால் பன்றிகள்தான் கூட்டமாக வரும். அதுபோலதான் சிலர் உள்ளனர்.

தே.மு.தி.கவுக்கு 2 சதவீதம் வாக்குகள்தான் உள்ளது, விஜயகாந்துக்கு உடல் நலக்குறைவு என்று கூறுபவர்கள் ஏன் எங்கள் வீட்டுவாசலில் கூட்டணிக்காக நிற்கிறார்கள். எங்களிடம் வைத்து கொள்ளாதீர்கள், நாங்கள் ஒதுக்கி கொடுக்கின்ற கட்சி. வருகிற எம்.பி தேர்தலில் விஜயகாந்த் இல்லாமல் ஆட்சி இல்லை. தற்போது டெல்லிக்கு குரல் கொடுப்பதற்கு சரியான தலைவர் இல்லை.

தமிழ்நாட்டுக்கு திட்டங்களை செய் என்று சொல்லும் தலைவரை கொண்டுவர வேண்டும். இப்போது உள்ளவர்கள் போல் வாயை மூடிகொண்டு சுற்றுகிற ஆள் விஜயகாந்த் இல்லை. இப்போதுள்ள கட்சியினரிடையே தப்பு பண்ணாத தலைவராக விஜயகாந்த் உள்ளார்.

அவர் மீது எந்தக் குற்றமும் சொல்ல முடியாது. வரும் எம்.பி. தேர்தலில் எதிரிகளுக்கு சவுக்கடி கொடுத்து அவர்களின் முகத்திரையை கிழிக்கணும். எனக்கும் விஜயகாந்த்துக்கும் தஞ்சாவூர் தொகுதி மேல் தனி பாசம் உண்டு.”