செய்திகள்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முதலாமாண்டு நிறைவை கருப்பு தினமாக அனுசரிக்கும் உ.பி. காங்கிரஸ்

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின் முதலாமாண்டு நிறைவையொட்டி, நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாக உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மாலை மலர்

கருப்பு பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது. அதை தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி.யை ஜூலை 1-ந்தேதி மத்திய அரசு அமல்படுத்தியது.

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்தது. பிரதமர் மோடியின் தவறான கொள்கைகளால் தான் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த நவம்பர் 8-ந்தேதியை கருப்பு தினமாக கடைபிடித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின் முதலாமாண்டு நிறைவையொட்டி, நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாக என உத்தரப்பிரதேசம் மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் கூறியதாவது:

நவம்பர் 8-ம் தேதி மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு அஞ்சலி செலுத்த உள்ளோம்.
பிரதமர் மோடி அறிமுகம் செய்துள்ள ஜி.எஸ்.டி. வரியால் வணிகர்கள் கடும் வேதனைப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, சிறு வணிகர்கள் முற்றிலும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் எந்த பயனும் அடையவில்லை. அவர்களுக்கு நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.