ராஜஸ்தானில் மே மாதம் 2ஆம் தேதி நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து, ராஜஸ்தானை சேர்ந்த விடுதி உரிமையாளர் மற்றும் ஒரு மருத்துவரை விசாரணை வளையத்திற்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.
ராஜஸ்தனை சேர்ந்த மாணவர் ஒருவர் கேரளாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவப்படிப்பு பயின்று வருகிறார். இவரின் தந்தை ராஜஸ்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார்.
மே மாதம் 2ஆம் தேதி இரவு 11மணியளவில் கேரளாவில் மருத்துவம் பயின்று வரும் மாணவருக்கு, சிகார் மாவட்டத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் நீட் மாதிரி வினாத்தாளை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.
இந்த மாதிரி வினாத்தாளை ராஜஸ்தானில் விடுதி நடத்திவரும் தனது தந்தைக்கு அனுப்பிய மாணவர், விடுதியில் தங்கி நீட் நுழைவு தேர்வுக்காக பயின்று வரும் மாணவர்களுக்கு கொடுக்கும்படி கூறியுள்ளார்.
இதனையடுத்து விடுதி உரிமையாளர் தனக்கு தெரிந்த ஆசிரியர் ஒருவருக்கு நீட் மாதிரி வினாத்தாளை மே 3ஆம் தேதி காலையில் அனுப்பியுள்ளார்.
இதனை பரிசோதித்த ஆசிரியர்கள் அசல் வினாத்தாளோடு, மாதிரி வினாத்தாளில் கேட்கப்பட்ட 135 கேள்விகள் ஒரேமாதிரி இருந்ததை கண்டு அதிர்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து சிகார் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஜெய்ப்பூரை சேர்ந்த இரண்டு சகோதரர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஆயுர்வேதம் படித்து வரும் சுபம் கயிர்னர் என்ற மாணவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.